சிதம்பரத்தில் ஒரே நாளில் 3 பேர் வாயில் நுரை தள்ளி மர்ம மரணம்.. போலீஸ் தீவிர விசாரணை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மணவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ், மணிகண்டன். சதீஷ், மணிகண்டன் இருவரும் இன்று காலை அதே ஊரில் உள்ள வயலில் வாயில் நுரை தள்ளியப்படி உயிரிழந்து கிடந்தனர்.
அருகே மதுபான பாட்டில்கள் கிடந்துள்ளன. இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த துரைபாடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில் 45 வயதுடைய செல்வமணி என்பவர் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார், அவரின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications