ஈரோடுக்கு கொண்டு போய் தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை... மேலும் 3 பேருக்கு தொடர்பு… பரபரப்பு தகவல்
திருச்செங்கோடு: தலித் மாணவர் கோகுல்ராஜை ஈரோடுக்கு கடத்திக் கொண்டு போய் கொலை செய்ததாகவும், இந்த கொலை வழக்கில், மேலும், 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக, சரண் அடைந்த சிவக்குமார் தெரிவித்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்ஜினியர் கோகுல்ராஜ் (22). இவர் கடந்த மாதம் திருச்செங்கோடு மலைக்கோவிலில் தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கும்பல் கடத்தி கொலை செய்து, உடலை பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசினர்.

இது தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைதுசெய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் நெத்திமேடு பொடாரன்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரணடைந்தார். இவர் கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜின் ஆதரவாளர் ஆவார். அந்த அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சரண் அடைந்த சிவக்குமாரை, போலீசார் புதன்கிழமை 5 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து கோகுல்ராஜை ஈரோடுக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் சிவக்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள யுவராஜ் மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்த நிலையில் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சிவக்குமார் கூறியதோடு அந்த 3 பேரின் விபரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications