ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 கொலைகள்- பதட்டத்தில் வேலூர்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் - புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில்வே ஊழியர்கள் நேற்று காலை 9 மணிக்கு நடந்து சென்றபோது அங்கு ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து அரக்கோணம் காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் பிணமாக கிடந்தவ 35 வயதுடைய அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோன்று அணைக்கட்டு அடுத்த செட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சின்னா என்பவர் கூலித் தொழிலாளி. இவர் மாந்திரீகத் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியே சென்ற சின்னா வீடு திரும்பவில்லை.
நேற்று காலை 9 மணிக்கு கரடிக்குடி அடுத்த சென்றாயன் கொட்டாய் கிராமம் அருகில் உள்ள ராஜாமலையில் அவர் பிணமாக கிடந்தார். வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சிலருக்கு சின்னா பில்லி சூனியம் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மற்றொருவர் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று முன் தினம் இவர் வீட்டில் தனியாக படுத்திருந்தார். நேற்று காலை 9 மணிக்கு அவரது மகள் பாமா தந்தையை பார்க்க வீட்டுக்குச் சென்றார். அப்போது தலையில் படுகாயங்களுடன் பெருமாள் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து குடியாத்தம் போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பெருமாளை அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.