100 வருட பழமையான கட்டடத்தில் இயங்கிய 3 புதுச்சேரி பள்ளிகள் இழுத்து மூடல்!
புதுச்சேரி: புதுவையில் பழைய நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்ததால், முன்னெச்சரிக்கையாக, புதுச்சேரியில், நூறாண்டு பழமையான கட்டடங்களில் இயங்கி வந்த 3 பள்ளிகள் மூடப்பட்டன.
புதுவை கடற்கரை சாலையில் சுமார் 140 ஆண்டுகள் பழமையான 2 மாடி நகராட்சி கட்டிடம் இருந்து வந்தது. கட்டிடம் பழுதடைந்திருந்ததால் அதில் இயங்கி வந்த நகராட்சி அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் பலகோடி ரூபாய் செலவில் அந்த கட்டிடத்தை புனரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் பெய்த தொடர்மழையால் நேற்று முன்தினம் இந்த கட்டிடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்தது.
அங்கு வேலை செய்த 10 தொழிலாளர்கள் சாப்பிட சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுவையில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான கட்டிடங்களை அரசு அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இந்த பட்டியலில் மிஷன் வீதியில் உள்ள கலவை கல்லூரி ஆண்கள் பள்ளி, வ.உ.சி ஆண்கள் பள்ளி, சுப்ரெய்ன் வீதியில் உள்ள பான்சியோனா பிரெஞ்சு பெண்கள் பள்ளியும் அடங்கும்.
தொடர் மழையை கருத்தில் கொண்டு மாணவர்கள் பாதுகாப்பு கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இந்த 3 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் வழக்கம்போல் இந்த பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.
திடீர் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டதற்கான காரணம் பற்றி அந்த பள்ளிகளின் முன்பு நோட்டீஸ் போர்டில் எழுதப்பட்டிருந்தது. எனவே மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications