3 மாணவிகள் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
திருச்சி: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தங்களின் இந்த முடிவிற்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்று அவர்கள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரியின் தாளாளரின் மகனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மையம் மற்றும் தன்வந்திரி அரங்கம் ஆகியவற்றை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மாணவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவிகள் விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.