குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் குட்டையில் மூழ்கி பலி.. சத்தியமங்கலம் அருகே சோகம்!
குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சத்தியமங்கலம் அருகேயுள்ள நல்லூர் கலைஞர்நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் கெளதம், செல்வம் என்பவரது மகன் சஞ்ஜெய, ரகுபதி என்பவரது மகன் ராஜ்குமார். இவர்கள் மூவரும் கனக்கரசம்பாளையம் அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று பள்ளி திறக்கவுள்ள நிலையில், இவர்கள் மூவர் உட்பட 5 பேர் நல்லூர் குட்டையில் நேற்று குளிக்க சென்றுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. குட்டையில் வண்டல் மண் அள்ளியபோது குட்டை சமமான நிலப்பரப்பு இன்றி குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இந்த நிலையில் குட்டையில் குளித்தபோது கெளதம், சஞ்செய் மற்றும் ராஜ்குமார் திடீரென நீரில் மூழ்கினர். இதனை கண்ட மற்ற 2 நண்பர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த கிராம மக்கள் மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி பலனளிக்காததால் மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

குட்டையின் உயரம் அதிகம் இருந்ததால் நீரில் மூழ்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குட்டையில் வண்டல் மண் எடுத்தபோது அதனை சமபடுத்தாமல் விட்டதும் விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications