திருவண்ணாமலை: கிணறு வெட்டும் போது மண் சரிந்து விபத்து - 3 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான கிணற்றில் சுரேஷ், முனியப்பன் மற்றும் சுதாகர் ஆகிய முவரும் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் கிணற்றில் பாறைகள் அதிகமாக இருந்ததால் வெடி வைத்து ஆழப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் வெடி வைப்பதற்காக டிரில்லர்கள் பயன்படுத்தி துளை போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்துள்ளது. இதனால் கிணற்றில் பணியில் இருந்த மூவரும் மண்ணில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து புதுப்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணறு ஆழப்படுத்தும் பணியில் மண் சரிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications