நடிகர் செந்தில் உறவினரின் 300 பவுன் கொள்ளையில் திடீர் திருப்பம்... மைத்துனியே விற்று விட்டு நாடகம்
கமுதி: நடிகர் செந்திலின் உறவினரின் 300 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் மைத்துனியை சிறுக சிறுக விற்று தின்றுவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் குருவலிங்கம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி உமா (40). இவரது சகோதரி சண்முக வடிவு. இவரது கணவர் பூபதி ராஜா. இவர் நகைச்சுவை நடிகர் செந்திலின் உறவினராவார்,
பூபதி ராஜா சென்னையில் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இந்நிலையில் தான் சேர்த்து வைத்த 300 பவுன் நகைகளை தங்கை உமாவிடம் கொடுத்து கமுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரில் வைக்க சொல்லியிருந்தார்.
மீண்டும் லாக்கர்
இவர்கள் எப்போது சுபவிஷேசங்களுக்கு சென்றாலும் அந்த நகைகளை பேங்க் லாக்கரில் இருந்து எடுத்து கொடுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் லாக்கருக்கே அந்த நகைகள் சென்றுவிடும். இவ்வாறாக பல ஆண்டுகள் உருண்டோடின.
நகைகள்
இந்நிலையில் சண்முகவடிவின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக லாக்கரில் உள்ள நகைகளை கொண்டு வரும் படி சண்முகவடிவு உமாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் நேற்று காலை நகைகளை எடுத்து கொண்டு வந்தார்.
சிசிடிவி காட்சிகள்
அப்போது அவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் 3 பேர் உமாவிடம் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். இதனால் திடுக்கிட்ட உமா, கமுதி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தனர்.
உமா இல்லை
அப்போது அங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறாததும் அந்த இடத்தில் உமா இல்லாததாலும் தெரியவந்தது. இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை உமாவின் மீது சென்றது. இதையடுத்து போலீஸார் உமாவிடம் துருவி துருவி விசாரித்தனர்.
நாடகம் அம்பலம்
அப்போது அவர் நகை கொள்ளை போனதாக கூறியது பொய் என்று வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மேலும் விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளில் அந்த நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் செலவு செய்தார்.
வாக்குமூலம்
150 சவரன் நகைகளை தான் விற்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சண்முகவடிவு நகைகளை கேட்டபோது வங்கி மேலாளர் விடுமுறையில் உள்ளதால் இன்னொரு நாள் சென்று கொண்டு வருகிறேன் என்று உமா கூறியுள்ளார். எனினும் சண்முகவடிவின் நெருக்கடி காரணமாக வேறு வழி தெரியாமல் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
பரபரப்பு
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து வேறேதும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்பிறந்த அக்காளின் நகைகளை விற்று தின்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.