சென்னையில் 37 பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது.. பேரிடர் ஆணையம் வார்னிங்.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: சென்னையில் 306 இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என்று தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் கண்டறிந்து அறிவித்துள்ளது. அதில் 37 பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாம்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தால் அடையாற்றில் திறந்துவிடப்பட்ட கூடுதல் நீரும் சேர்ந்து கொண்டு சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது.
கடும் சேதம்
ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும் அளவுக்கு நிலைமை மிக மோசம் அடைந்தது. உயிரிழப்புகளும், பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன. இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து தற்போது ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இப்போது நிலைமை பரவாயில்லை
வெள்ளத்தின் காரணமாக சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 859 பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன என்றும், தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட மராமத்து பணிகளின் காரணமாக இந்த எண்ணிக்கை இப்போது குறைவடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடையாறு மண்டலம் அதிகம்
இப்போதுள்ள நிலையில் சென்னையில் 306 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள பகுதிகளாக இனம் காணப்பட்டுள்ளன. அதில் 37 பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அப்படி மிக மோசமான பாதிப்புக்கு வாய்ப்புள்ளவற்றில், 24 பகுதிகள் அடையார் மண்டலத்திற்கு உட்பட்டவை என்பது அதிர்ச்சி தகவல். கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகள் இப்படி மோசமான பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதி பட்டியலில் வருகின்றது.
தேனாம்பேட்டை மண்டலம்
தேனாம்பேட்டை மண்டலத்தில் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் ஏஆர் புரம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. வளசரவாக்கம் மண்டலத்தில் 27 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது