ஜெ. விடுதலை எதிரொலி - தமிழகத்தில் ஒரே நாளில் 32 டி.எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 32 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வழக்கின் மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பதிவேடு துறை டி.எஸ்.பியாக இருந்த நவநீதகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திண்டுக்கல்லில் டி.எஸ்.பியாக பணியாற்றிய ஆரோக்கியபிரகாசம் சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை ஆவின் நிர்வாகத்தில் டி.எஸ்.பியாக இருந்த தங்கராஜு சென்னை தெற்கு போக்குவரத்து உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்பி லோகநாதன் சென்னை டி.எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நில மோசடி தடுப்பு பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் டிஎஸ்பி ராஜேந்திரன் காட்பாடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஹைகோர்ட்டில் உதவி கமிஷனராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நஷீர் பாஷா தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். இவர் வாட்ஸப்பில் பெண் போலீஸ் ஒருவருடன் ஆபாசமாக பேசிய வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் நில மோசடி தடுப்பு பிரிவில் இருந்த மணவாளன் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றலாகி உள்ளார். சென்னையை சேர்ந்த 3 டிஎஸ்பிக்கள், காஞ்சிபுரத்தில் பணி செய்த 4 டிஎஸ்பிக்களும் மாற்றலாகி உள்ளனர். இதேபோல் தஞ்சாவூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என 32 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications