சென்னையில் தொடரும் மழை: தேங்கிய மழை நீரை வெளியேற்ற 5000 ஊழியர்கள் தயார்
சென்னை: சென்னை, புறநகர்ப் பகுதிகளில், புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
தென் மேற்கு வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடலூருக்கு அருகே திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. அப்போது, கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக, நெய்வேலியில் 480 மி.மீ. அளவுக்கு பலத்த மழை கொட்டியது. தொடர் மழையால், நீலகிரி, சேலம், நெய்வேலி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை மழையின்றி காணப்பட்டது. பின்னர், கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அம்பத்தூர், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், நந்தனம், எழும்பூர் உள்ளிட்ட நகரின் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் மேகங்கள்கூடி, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வடியாத வெள்ளம்
எழும்பூர், சைதாப்பேட்டை, அம்பத்தூர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கெனவே மழை நீர் வடியாத நிலையில், புதன்கிழமை இரவில் பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்பட்டன.

மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 ஊழியர்கள்
சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், ஆங்காங்கே தேங்கிநிற்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

சிறப்பு முகாம்கள்
மழை வெள்ளத்தினால் தொற்று நோய் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications