கொங்கு மண்டத்தில் 3-வது அதிரடி ஐடி ரெய்டு... வசமாக சிக்கப் போவது யார்?
கொங்கு மண்டலத்தில் 3-வது அதிரடி சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். தமிழக முக்கிய புள்ளி ஒருவரை குறிவைத்தே இச்சோதனைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: கொங்கு மண்டலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது அதிரடி சோதனையை இன்று நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளில் சிக்கப் போகும் அந்த முக்கிய புள்ளி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்ததுதான் தாமதம்... கூடவே வருமான வரித்துறை ரெய்டுகளும் சூடு பிடித்து வருகிறது.
பெங்களூருவில் ரூ2,000 நோட்டுகள் சிக்கிய நிலையில் ஈரோட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தங்க கட்டிகள், ரூ2,000 நோட்டுகளுடன் ரொக்கப் பணம் ஆகியவை சிக்கின. இது முக்கிய புள்ளி ஒருவரின் உறவினர் வீடு எனவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேலம் கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போதும் அந்த முக்கிய புள்ளியின் பெயர் அடிபட்டது.
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் 3-வதாக நாமக்கல் அருகே உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த 3 சோதனைகளுமே மிக முக்கிய புள்ளி ஒருவரை குறிவைத்தே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இம்மூன்று இடங்களுமே அந்த முக்கிய புள்ளி வசம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக சந்தேகப்படுவதாலேயே சோதனை நடத்தப்படுகிறது என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள்.