ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்களிக்க பணம் கொடுத்த 4 அதிமுகவினர் கைது
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்த அதிமுகவினர் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை தீவிரமாக பதிவு செய்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர் அனில்குமார் ஜா, பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் தோரா, சட்டம் ஒழுங்கு பார்வையாளர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஜி.வினய் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பெருகமணி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ய ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நான்கு அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.