நடுரோட்டில் கேக் வெட்டிய 4 பேர்.. நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அட்டூழியம்
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் அவ்வழியாக சென்ற 15 வயது சிறுமியின் மீது வலுக்கட்டாயமாக கேக் தடவிய போது கண்டித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை சரமாரியாக அடித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் புகாரின் பேரில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வீட்டுக்குள் கேக் வெட்டினார்கள், பின்னர் திருமண மண்டபங்கள், கல்லூரிகள்,பள்ளிகளில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவது, கடற்கரைகள், ரிசார்ட்கள், ரெஸ்டாரென்ட்கள் உள்ளிட்டவற்றில் பிறந்தநாளை கொண்டாடுவது என இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்னும் சிலர் சாலைகளில் கேக் வெட்டி கொண்டாடுவது, அரிவாளால் கேக் வெட்டுவது, தேவையில்லாமல் அவ்வழியே வருவோர் போவோரை வம்புழுக்கு இழுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடுரோட்டில் சிலர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவியுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த மாணவி, அவர்களின் செயலை கண்டித்து தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சாலையில் பிறந்தநாள் கொண்டாடி சிறுமியிடம் வம்பு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21), சஞ்சீவி (19), சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications