சென்னை: கர்நாடக மாநிலத்தவர் ஹோட்டல் மீது கல்வீசிய 4 பேர் கைது
சென்னை: சென்னையில் கர்நாடக மாநிலத்தவரின் ஹோட்டல் மீது கல்வீசிய நான்கு அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், கர்நாடக வர்த்தக நிறுவனங்கள், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கார்கள், அந்த மாநில பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சென்னையிலும் ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தன. எம்.ஜி.ஆர் நகர் அண்ணா நெடுஞ்சாலையில் உள்ள கர்நாடக மாநிலத்தவருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றின் மீதும் கல் வீசப்பட்டது.
இதில் ஓட்டலின் முன்பக்கம் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்தது. அருகில் இருந்த டெய்லர் கடையும் தாக்கப்பட்டது. இது குறித்து, டெய்லர் கடை உரிமையாளர் கதிர்வேல் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (25), கிருஷ்ணமூர்த்தி (25), சுரேஷ் (26), கார்த்திக் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து விடிய விடிய போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். புதிய கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், ஆபாஸ்குமார் ஆகியோர் தலைமையில் இரவு ரோந்து பணி நடந்தது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இதை ஆய்வு செய்தார். சென்னை முழுவதும் 140 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடந்தது.
சென்னையில் மட்டும் 170 இடங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஓட்டல்கள், வங்கிகள், கிளப்புகள் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்தும் சுற்றி வந்து கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications