நள்ளிரவில் ரோந்து சென்ற எஸ்.ஐ., ஏட்டை இரும்புக் கம்பியால் தாக்கிய 4 பேர் கைது
திருச்சி: திருச்சியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரை தாக்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி நீதிமன்ற எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்ல உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு போலீசார் கைகாட்டியும் அது நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.
இதையடுத்து போலீசார் இது குறித்து புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் அழகர் ஏட்டு செந்திலுடன் பைக்கில் சென்று அந்த ஆட்டோவை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து அவர் அந்த ஆட்டோவை பைக்கில் விரட்டிச் சென்று புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலை அடுத்து உள்ள அம்மையப்ப நகர் அருகே தடுத்து நிறுத்தினார்.
ஆட்டோவில் இருந்த 5 பேர் கீழே இறங்கி வந்து அழகர் மற்றும் செந்திலை தாக்கினர். அப்போது செந்தில் 2 வாலிபர்களை பிடித்தவுடன் அவர் பிடியில் இருந்து தப்பிய அவர்கள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவர் நெற்றியிலும், அழகரின் காது பகுதியிலும் தாக்கினர்.
அந்த கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றது. ரத்தம் சொட்ட சொட்ட அழகரும், செந்திலும் பைக்கில் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். அந்த கும்பல் கனரா வங்கி காலனி அருகே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியோடியது. இது குறித்து அழகரும், செந்திலும் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து அழகரையும், செந்திலையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி அதில் தில்லைநகர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த காதர், குழுமணியை சேர்ந்த மனோஜ் குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 5வது நபரை தேடி வருகிறார்கள்.
புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் ஆறுகண் பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாததால் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த பஸ் கண்டக்டரை ஒரு கும்பல் தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றது.