விடுமுறையை கொண்டாடிய போது சோகம்.. பாபநாசம் தலையணையில் மூழ்கி 4 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னையை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சென்னையைச் சேர்ந்த நக்கீரன், ஸ்ரீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த வசந்த் மற்றும் சதீஷ் ஆகியோர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக பாபநாசம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். 4 பேரும் பொதிகை மலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். பொதிகை மலைக்கு பாபநாசம் வழியே தற்போது யாரும் செல்வதில்லை என்பதை அறிந்த அவர்கள் 9-ந்தேதி தலையணையில் குளிக்க சென்றார்கள்.

ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள், கரை திரும்ப முடியாமல், அணையில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்துவந்த வந்த வி.கே.புரம் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று இரவு ஒருவரின் உடலை மீட்டனர்.
இதனிடையே மற்ற 3 பேர் உடலும் உள்ளே கிடக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் இரவு அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலையில் 3 பேர் உடலும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உடற்கூறு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று திருநெல்வேலி முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications