வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்யக் காரணமான பெண் சரண்
வாணியம்பாடி: வேலூரில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு காரணமான பெண் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வாணியம்பாடி அடுத்த கட்டாரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு ஸ்ரீவித்யா, பிரவீனா, நிவேதா மற்றும் அனிதா என 4 மகள்கள். இதில் 2 ஆவது மகள் காதல் திருமணம் செய்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மூத்த மகள் ஸ்ரீநித்யாவுக்கு உறவுக்கார மாப்பிள்ளையுடன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சேகர் திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு சென்ற ஸ்ரீநித்யா, அங்கு கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயமானார். மன உளைச்சலுக்கு ஆளான சேகரும், அவரது மனைவியும் தங்களது 2 மகள்களைக் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தாய், தந்தை, சகோதரிகள் மரணத்துக்கு காரணமான மூத்த மகள் ஸ்ரீநித்யா நேற்று மதியம் வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். டி.எஸ்.பி. வனிதா மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, "விருப்பமில்லாத திருமணத்தை பெற்றோர் நடத்தி வைத்தனர். கணவருடன் வாழப் பிடிக்காததால், திருப்பூர் சென்று கூலி வேலை செய்து பிழைக்கலாம் என எண்ணி தாலியை கழட்டி வைத்துவிட்டு திருப்பூர் சென்றேன். என் பெற்றோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தங்கை பிரவீனா வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்தாள். அதை நான் நம்பவில்லை.
நேற்று நாளிதழ்களில் வெளியான செய்தியைக் கண்டு துடித்தேன். என் மதி கெட்டதால் தவறு செய்துவிட்டேன்" என கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.