கொடைக்கானலில் கன மழை.. காட்டாற்று வெள்ளம்.. நிலச்சரிவில் சிக்கி சேலத்தை சேர்ந்த 4 பேர் பலி
Recommended Video

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான, கொடைக்கானல் சின்னபள்ளம் பகுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக கொடைக்கானலில் 19 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மண்ணில் புதைந்து 4 கட்டிட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரவி (50), ராஜேந்திரன் (50), கார்த்திக் (21) மற்றும் சுந்தர்ராஜன்(40) ஆகிய 4 பேர்தான் உயிரிழந்த தொழிலாளிகள் என்று தெரியவந்துள்ளது.
இந்த நால்வருமே சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நேற்று இரவு இந்த மண்சரிவு சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திண்டுக்கல்லில் கஜா புயல் மையம் கொண்டிருந்தபோது கொடைக்கானலில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மழையும் கொட்டியது. எனவேதான் கொடைக்கானல் மலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
தொடர்ந்து 18 மணிநேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது. குறைந்த காலத்தில் அதிக அளவில் மழை பெய்ததே மண்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
புயல் மற்றும், கனமழையால் கொடைக்கானல் செல்லும் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் கொடைக்கானலுக்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் - பழனி நடுவேயும், கொடைக்கானல் - திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதால், வீக் என்ட்டுக்காக கொடைக்கானல் செல்வோர் ஏமாற்றமடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கொடைக்கானல் மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications