4 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது
குடும்பத் தகராறில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி: சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன். இவர் நாகை மாவட்டம் திருப்பங்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்த முதல் மாதத்திலிருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சரவணன் தன் மனைவி தேவியிடம், அவரது பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி வருமாறு வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான தேவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனின் தொந்தரவு தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், சரவணன் திருப்பங்கூருக்கு வந்து தேவியை வீட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு தேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தேவியின் தலையின் பின்புறத்தில் அடித்துள்ளார். இதில், தேவி வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவியின் பெற்றோர், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தேவியின் கணவர் சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.