நெல்மூட்டைகள் நனைந்ததால் 2 விவசாயிகள் மரணம்- உளுந்து, வாழை கருகியதில் 2 பேர் உயிரிழப்பு
பயிர்கள் கருகியதால் விழுப்புரம், தேனியில் 2 விவசாயிகள் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளனர். கும்பகோணம், விருத்தாசலத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கும்பகோணம்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 4 மாதங்களில் மரணமடைந்துள்ளனர். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்தியும், கிணற்று நீரை பயன்படுத்தியும் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த விவசாயிகள் மூட்டையாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வழியின்றி அவை மழையில் நனைந்த மன உளைச்சலில் மரணமடைந்துள்ளனர்.
வறட்சியில் விவசாயிகள் மரணமடைந்த நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் நனைந்த அதிர்ச்சியில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
கும்பகோணம் பந்தநல்லூர் அருகே ஸ்ரீரங்கராஜபுரத்தில் விவசாயி மனோகரன்,55 மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கண்டு மனமுடைந்து அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு
தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சில விவசாயிகள், அரும்பாடு பட்டு தங்கள் நெற்பயிரை காப்பாற்றி விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வேளாண்துறை ஏற்பாடு செய்யாததாலும், அதிகாரிகள் அவற்றை உடனடி கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியதாலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின.

விவசாயி மரணம்
இந்த நெல்மூட்டைகளுக்கு போதிய விலை கிடைக்காது என்பதால், வேதனையில் உறைந்துள்ள விவசாயிகள், அரசு தங்களுக்கு கருணை அடிப்படையில் உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்தில் விவசாயி கணேசன் 65, நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததை கண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காரணம் என்ன?
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் உள்பகுதியில், கடந்த 6 மாதங்களுக்கு முன் கொள்முதல் செய்த தானிய மூட்டைகளை வியாபாரிகள் எடுத்து செல்லாமல் இருப்பு வைத்துள்ளனர். இதனால், உள்பகுதியில் இடமில்லாமல் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழையில் நனைந்தன.

திறந்த வெளியில் நெல் மூட்டைகள்
இதனால் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள மேலும் 10 ஆயிரம் தானிய மூட்டைகளும், மழையில் நனையும் அபாயம் உள்ளதால் விற்பனை கூட நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்து பயிர்கள் கருகின
இதனிடையே விழுப்புரம் அருகே நீரின்றி பயிர்கள் கருகியதை கண்டு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கயத்தூரில் 5 ஏக்கரில் நெல், உளுந்து சாகுபடி செய்திருந்தார் விவசாயி ஏழுமலை. பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வாழை மரங்கள் காய்ந்தன
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியில் வாழைத்தோட்டம் தண்ணீர் இன்றி காய்ந்ததால் வேதனையில் வயல் வெளியில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி கணேசன் மரணமடைந்துள்ளார். கணேசன் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தார்.

மாரடைப்பில் மரணம்
வாழை நடவு செய்து ஏழு மாதம் ஆன நிலையில் கிணற்று நீர் வற்றியது. வாழைத்தார் பலன் தரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் வாழைகள் காய்ந்து வந்தது. இதனால் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வந்துள்ளார். திங்கட்கிழமை அதிகாலையில் அருகில் உள்ள தோட்டக்கிணற்றில் தண்ணீர் கடன் வாங்கி பாய்ச்ச சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications