மயிலாடுதுறை பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் சிதறி பலி.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தால் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 3 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.மதன், திரு.மகேஷ் மற்றும் திரு.ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் . மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications