கொடநாடு பங்களாவில் ஜெ.,வின் கைக்கடிகாரங்கள் கொள்ளை: மாவட்ட எஸ்.பி., தகவல்
கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா சசிகலா பயன்படுத்திய 3 அறைகளில் கொள்ளை நடைபெற்றுள்ளதாக நீலகிரி எஸ்பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் அறையில் இருந்த 5 கைக்கடிகாரங்களை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு பங்களாவில் அதிக அளவில் பணம் இருப்பதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கொள்ளையர்களிடம் கூறியுள்ளார். பங்களாவில் மோப்ப நாய், சிசிடிவி கேமரா இல்லை எனவும் அவர் கொள்ளையர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலி பதிவெண் கொண்ட 3 கார்களை பயன்படுத்தி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது எட்டாவது கேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் சென்ற கொள்ளையர்கள், ஜெயலலிதாவின் அறை கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் ஜெயயலிதா மற்றும் சசிகலா பயன்படுத்திய 5 கைக்கடிகாரங்கள், 5 கிரிஸ்டல் அலங்காரப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications