கொலையில் முடிந்த பெண் போலீஸ் கள்ளக்காதல்.. 4 போலீசார் சஸ்பெண்ட்.. எஸ்.பி. அதிரடி நடவடிக்கை !
திருவள்ளூரில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் பெண் காவலரின் வீட்டில் மற்றொரு காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்: கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் கொலை பெண் போலீஸ் உள்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாம்சன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவள்ளூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவருக்கும் மற்றொரு போலீஸான கல்லானை என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அதே நேரத்தில் கல்யாணைக்கு தெரியாமல் சரண்யாவுக்கு, சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவருடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தெரிய வந்தபோது அமிர்தராஜூடன் கல்யாணை மோதியுள்ளார்.
இதனால் அமிர்தராஜுக்கும், கல்யாணைக்கும் முன்விரோதமானது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சுமார் 11 மணி அளவில் கல்லானை தமது சக போலீஸ்காரர்களான சுந்தரபாண்டியன், சந்திரன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது சரண்யா விவகாரத்தை கல்லானை நண்பர்களிடம் விவரித்திருக்கிறார். தம்மை அமிர்தராஜ் மிரட்டியதாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், தற்போது சரண்யா வீட்டில் உள்ள அமிர்தராஜை ஒரு கை பார்க்க வேண்டும் என்றும் கல்லானை தெரிவித்தாராம்.
மதுபோதையில் இருந்த 3 பேரும், சரண்யா வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அமிர்தராஜை வெளியே வருமாறும், தகராறில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரபாண்டியனுக்கும், அமிர்தராஜுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது
திடீரென அமிர்தராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரபாண்டியனை குத்தினார். இதில் அலறிய சுந்தரபாண்டியனின் குரலை கேட்டு மற்ற போலீஸ்காரர்கள் குவிந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரபாண்டியனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அமிர்தராஜை திருவள்ளுர் டவுன் போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சரண்யாவின் அக்கா மணிகண்டதேவி, திருவள்ளூர் டவுன் போலீசில் நேற்று இரவு புகார் கொடுத்துள்ளார். அதில், "நான், தங்கை சரண்யா, தாத்தா சுருளியப்பன் ஆகியோர் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, ஆயுதப்படை காவலர்கள் சந்திரன், கல்லானை, சந்தானகுமார், சுந்தரபாண்டி ஆகியோர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, தகாத வார்த்தைகளால் பேசினர். எங்களது கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள் சந்திரன், கல்லானை, சந்தானகுமார் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், போலீஸ்காரர் சுந்தபாண்டி கொலை தொடர்பாக போலீஸ்காரர்கள் கல்லானை, சந்திரன், சந்தானகுமார் மற்றும் பெண் போலீஸ் சரண்யா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சாம்சன் இன்று உத்தரவிட்டுள்ளார்.