இந்தி பேசும் மக்கள் மாறினால் தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும்! காங்கிரஸ் செய்த தவறு பற்றி அன்சாரி!
மயிலாடுதுறை: இந்தி பேசும் மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என்றும் அதுவரை ஒன்றும் நடக்கப் போவதில்லை எனவும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியிருக்கிறார்.
மேலும், காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்தும் அக்கட்சியின் அணுகுமுறைகள் பற்றியும் அன்சாரி விமர்சித்துள்ளார்.

இன்று வெளியான 4 மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து தோல்வியை தழுவியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற தொழிலதிபர் ஒருவர் இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது;
''மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ்வதை இருவரும் கடைபிடித்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விட்டுக் கொடுக்காவிட்டால் என்னவாகும் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகளே ஒரு உதாரணம் ஆகும்.
இன்று வெளியாகியுள்ள 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தெலுங்கானா தென்னிந்தியாவில் இருப்பதால் அங்கு மட்டும் மக்களின் தீர்ப்பு வேறு மாதிரி உள்ளது. இந்தி பேசக்கூடிய வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை, இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது. ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் களமாடியிருக்க வேண்டும். அதேபோல் மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் அவர்கள் கேட்ட சில தொகுதிகளை கொடுத்திருந்தால் காங்கிரஸ் அங்கு இந்த தோல்வி அடைந்திருக்காது.
இந்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் என கருதப்பட்டதால், இந்தியா கூட்டணி சார்பில் இன்னும் தீவிரமாக களமாடியிருக்க வேண்டும் , கூட்டணிக் கட்சித் தலைவர்களை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு அழைத்திருக்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications