4 வயது சிறுமியிடம் சில்மிஷம்: பிளஸ் 1 மாணவனுக்கு தர்ம அடி
குமரி: பேச்சிப்பாறையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ் 1 மாணவரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர்.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த பேச்சிப்பாறை பகுதியின் மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பில் முருகன்-ரேவதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தையை கொஞ்சி மகிழ்வது வழக்கம்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த பிளஸ்-1 மாணவர் ஒருவரும் அந்த சிறுமியிடம் அன்பாக பழகி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே சிறுமியுடன் பிளஸ்-1 மாணவர் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிய பெற்றோர் உடனே வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அங்கு சிறுமியை காணவில்லை. அழுகுரல் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.
பதறிப்போன பெற்றோர் சிறுமியை அங்குமிங்கும் தேடினர். அப்போது வீட்டுக்கு பின்புறம் ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமிக்கு பிளஸ்-1 மாணவன் பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டனர். அதிர்ந்து போன அவர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மாணவனை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக அடித்தனர்.
பின்னர் அவரை பேச்சிப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகாரும் கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஊர் மக்கள் பலரும் காவல் நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications