சென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சாவுடன் 'திண்டுக்கல் செல்வி' கைது
கஞ்சாவை ஆட்டோவில் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சா கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சில காலமாகவே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ரயிலிலிருந்து இறங்கி வெளியே வரும் பயணிகளிடம் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய ஒரு பெண்ணிடம் 40 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனர்.
ரெயிலில் கடத்திவரப்பட்ட அந்த கஞ்சா மூட்டைகளை ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது அந்த பெண்ணை போலீசார் கைது செய்ததுடன் 40 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
விசாரணையில் அவரது பெயர் செல்வி என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது கஞ்சா எங்கிருந்து வந்தது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? இதில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? என்றெல்லாம் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.