கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சாவு! கேரளாவிலிருந்து காய்ச்சல் பரவியதா?
கோவை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கோவையை சேர்ந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை டவுன்ஹால் ராஜவீதியைச் சேர்ந்தவர் மும்தாஜ் (40). அவரது அக்காள் பேரன் அகில் அகமது (10). இவ்விருவரும் சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலை வலியால் அவதிப்பட்டனர். காய்ச்சல் தொடர்ந்த நிலையில் அவர்கள், 10 நாட்களுக்கு முன்பு, கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் இருவரும் எச்1என்1 எனப்படும் வைரஸ் பாதிப்பால் பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மும்தாஜூம், அகில் அகமதுவும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு அகில் அகமது பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மும்தாஜ் பரிதாபமாக இறந்தார். இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்துள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர்கள் ஊர் திரும்பினர். எனவே கேரளாவில் இருந்துதான் எச்1என்1 பரவியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியாகி இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications