1970-ல் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா? 77 வயது சென்னை முதியவர் விளக்கம்
சென்னை: 40 ஆண்டுகளுக்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் புகார் குறித்து 77 வயது சென்னை முதியவர் லாவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி பூர்ணிமா கோவிந்தராஜூலு அண்மையில் சென்னை போலீசில் திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூட்டுக் குடும்பமாக வசித்த போது 13 வயதில் தமது உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்; இப்போது முதியவரான பின்னரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிர வைத்திருந்தார்.
1983-ம் ஆண்டு கனடாவுக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்ட பூர்ணிமா திடீரென 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் தொல்லைக்கு தற்போது புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 77 வயது முதியவர் லாவக்குமார் இந்த புகார் குறித்து தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில், பூர்ணிமா என் மருமகனின் தங்கை. என் மருமகனிடமும், அவரது தந்தையிடமும் நான் கடனாக பணம் வாங்கியிருந்தேன். தொழில் வீழ்ச்சி அடைந்ததால் என்னால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனால் என் மகளுக்கும், என் மருமகனுக்கும் தகராறு ஏற்பட்டது. மருமகன் என்னுடன் பேசுவதில்லை. இந்த குடும்பப் பிரச்னையில் என்னை பழிவாங்கத்தான் என் மீது இப்படியொரு அவதூறு புகார் அளித்துள்ளார் பூர்ணிமா.
இப்போது 77 வயதாகிறது. என் கடைசி காலத்தில் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். பூர்ணிமா தன்னைவிட வயதில் மிகவும் மூத்தவரை திருமணம் செய்தது, பின்னர் விவாகரத்தானது, கனடாவில் அவர் உளவியல் சிகிச்சை எடுத்துவருவது போன்ற விவரங்களை நான் போலீசில் தெரிவித்துள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார்.