கட்டிங் பிளேயரில் வைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல்: 8 பேர் கைது- 5.9 கிலோ தங்கம் பறிமுதல்
சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை கடத்திவந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சிங்கப்பூர், துபாயில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங் களில் அதிகாரிகள் உஷார்படுத்தப் பட்டனர். தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை செங்கல்பட்டில் வைத்து மடக்கிய புலனாய்வு அதிகாரிகள் அதில் இருந்தவர்களி டம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
கட்டி கட்டியாக தங்கம்
சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், உடனடியாக காரை சோதனை செய்தனர். இதில் அந்தக் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தக் காரில் இருந்த கட்டிங் பிளேயர் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கட்டிங் பிளேயரில் கடத்தல்
இதையடுத்து கட்டிங் பிளேயரை ஆய்வு செய்தபோது கட்டிங் பிளேயரின் கைப்பிடியின், ரப்பர் உறைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. இதில் இரும்பு கைபிடியை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தங்க கம்பிகளைப் பொருத்தி,அதன் மேல் ரப்பர் உறையைப் பொருத்தியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த சென்னையைச் சேர்ந்த சபீர் அகம்மது,29, உபயத்துல்லா,33 ஆகிய இருவரையும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, விசாரணை செய்தனர்.
வீட்டில் பதுக்கி வைத்த நகைகள்
கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மன்சூர்,28, ராஜா முகம்மது, 32 ஆகியோர் வீடுகளில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அங்கிருந்தும் கடத்தல் தங்கநகைகளையும்,தங்க கட்டிகளையும் அவர்கள் கைப்பற்றினர். இது தொடர்பாக அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
5.9 கிலோ தங்கம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், சிங்கப்பூர், துபையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நண்பர்கள் மூலம் தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்து, அவர்களிடமிருந்து தங்கத்தைப் பெற்ற அதை கார் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 5.9 கிலோ எடையுள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
8 பேர் கைது
இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக மேலும் 4 பேரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட் டனர். இதேபோல துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்திக் கொண்டு வந்த கும்பலையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர். இங்கும் கட்டிங் பிளேயரில் தங்கத்தை மறைத்து கடத்தி கொண்டு வரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உதவியுடன் தங்கம் கடத்தல்
சிங்கப்பூர், துபாயில் இருந்து தமிழகம் வருபவர்களிடம் தங்கக் கடத்தல்காரர்கள், நகைகள், பிரேஸ்லெட்களாக தங்கத்தை கொடுத்து அனுப்புகின்றனர். அவர்களை புகைப்படமாக எடுத்து வாட்ஸ்அப் மூலம் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். சென்னை, திருச்சி விமானநிலையத்தில் வந்து இறங்கிய உடன் அவர்கள் மூலம் தங்கத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் தங்கம் எளிதாக கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.