திருவள்ளூரில் 5 குழந்தைகள் கடத்தல்- தப்பி வந்த சிறுமியால் அனைவரும் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ஐஸ் வாங்கித் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஐந்து குழந்தைகளை கடத்தியுள்ளார்.கடத்தப்பட்ட குழந்தைகளில் தப்பித்து வந்த ஒரு சிறுமி கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சக்தி , 9, புன்னகை,7, பிரியா,4, மோகன்,7, தேவி,5. இவர்கள் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு வந்து அவர்களுக்கு ஐஸ் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பிய சிறுமிகள் மற்றும் சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
சற்று தூரம் சென்றதும் சிறுமி சக்தி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நடந்த விவரத்தை தனது தந்தை வரதராஜனிடம் இதுபற்றி தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வரதராஜன் கடத்தப்பட்ட சிறுமி புன்னகையின் தந்தை ரவியை அழைத்துக்கொண்டு ஆளுக்கொரு புறமாக தேடினர்.
அம்மையார்குப்பத்தை அடுத்த கொங்காமுடி மலை அருகே ரவி தேடிச் சென்றபோது சிறுமிகள் மற்றும் சிறுவனுடன் மர்மநபர் சென்று கொண்டிருந்தார். ரவியை பார்த்ததும் மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
ரவி கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இந்த தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் அம்மையார் குப்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.