அமெரிக்க கப்பல்: 3 மாலுமிகளுக்கு 5 நாள் போலீஸ் காவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கப்பலில் இருந்த 3 மாலுமிகளை 5 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்திய கடல் எல்லையில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பாதுகாவலர்கள் மற்றும் கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர் கடந்த 18ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பலின் பராமரிப்பு பணிக்காக கப்பலின் கேப்டன் டட்னிக் வேலன்டைன் மற்றும் தலைமை பொறியாளர் சிகோரென்டொ வெலரி ஆகியோர் கப்பலில் இருந்தனர். இவர்களில் கப்பல்கேப்டன் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து இருவரையும் க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசிய நிலையில், பிடிபட்டவர்களில் 22பேர் சென்னை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அமெரிக்க ஆயுத கப்பல் விவகாரத்தினை கியூ.பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க கப்பலை சேர்ந்த பால்டேவிட் டெர்மிடவர்(இங்கிலாந்து), மற்றும் இந்தியாவை சேர்ந்த லலித்குமார் குராங், ராஜேஷ்வர் திவேதி ஆகியோரை க்யூ பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இன்று நீதிபதி கதிரவன் முன் விசாரணைக்கு வந்தது. இதில் மூன்று பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். திங்கள் கிழமை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications