தமிழக மீனவர்கள் 5 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகு ஒன்றையும் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி படகுடன் 5 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த 5 மீனவர்களும் பிற்பகலுக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதன் பின்னர்தான், மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.
ஏற்கனவே, இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்திருப்பது தமிழக மீனவர்களிடையே வேதனையை அதிகரித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications