அதிகாலையில் 2 விபத்துக்கள்... 3 ஐடி ஊழியர்கள் உள்பட 5 பேர் பலி.. டிரைவர் தூங்கியதால் விபத்து!
சென்னை: சென்னை அருகே பல்லாவரத்தில், இன்று அதிகாலையில் நடந்த அடுத்தடுத்த 2 விபத்துக்களில் 3 ஐடி ஊழியர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அங்கு சாப்ட்வேர் என்ஜீனியர்களாக பணியாற்றி வந்தவர்கள் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சுரேஷ் (22), அர்ஜூனன் (23), அன்புராஜ் (23), சேலையூரை சேர்ந்த ரிட்லால் உள்பட 7 பேர். இன்று அதிகாலை 3 மணியளவில் பணி முடிந்து நிறுவனத்தின் காரில் வீட்டுக்குக் கிளம்பினர். ராஜ்குமார் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
இவர்களில் 3 பேர் கிண்டியில் இறங்கியுள்ளனர். சுரேஷ் உள்பட 4 பேர் காரில் இருந்தனர். கார் பல்லாவரம் அருகே வந்த போது ஒரு வளைவை கடப்பதற்காக டிரைவர் காரை வலதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த இடத்தில் அப்போது இருளாக இருந்துள்ளது. டிரைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலை நடுவே இருந்த தடுப்பானை கவனிக்க அவர் தவறி விட்டார்.
இதனால் கார் சாலைத் தடுப்பானில் மோதியுள்ளது. இதையடுத்து வேகமாக காரை இடதுபுறமாக டிரைவர் திருப்பவே, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி, அருகே மூடப்பட்டிருந்த கடையில் மோதி நின்றுள்ளது.
நொடியில் நடந்து விட்ட இந்த விபத்தில் சிக்கி சுரேஷ், அன்புராஜ், அர்ஜூனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரிட்லால் மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 3 பேர் உடலும் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த ரிட்லால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சுரேஷ் சேலத்தைச் சேர்ந்தவர். கிழக்கு தாம்பரத்தில் தங்கியிருந்தார். அன்புராஜ் திருச்சிக்காரர். குரோம்பேட்டை ராதாநகரில் தங்கியிருந்தார். அர்ஜூனன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். டிரைவர் ராஜ்குமார் திண்டிவனம். ரிட்லால், பீகாரைச் சேர்நத்வர்.
இன்னொரு விபத்து
இதே பல்லாவரம் பகுதியில் இன்று அதிகாலையில் இன்னொரு விபத்தும் நடந்து, அதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசுவாமி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (35). பம்மல் அருகே உள்ள தனியார் தோல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை திருநீர்மலை ரோடு அருகே பைக்கில் சண்முகம் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மீது வேகமாக மோதினார். இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த பப்லு படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
அதேபோல, பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (27). தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கார் டிரைவராக உள்ளார். இன்று அதிகாலை மருத்துவமனைக்கு செல்வதற்காக நாகராஜ் பைக்கில் சென்றார். முடிச்சூர் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக நாகராஜ் பைக் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கள் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.