சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயற்சி: 5 மாணவர்கள் கைது
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில் வரும் 10-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள திட்ட மிட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிடப் போவதாக மாணவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவன் அருகே தடுப்பு வேலி அமைத்து போலீசார் நிறுத் தப்பட்டுள்ளனர். என்றாலும் தமிழ்நாடு மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சத்தியமூர்த்தி பவனை இன்று முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பகல் 11 மணி அளவில் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 மாணவர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து கோஷம் போட்டப்படி சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கார்த்திக் என்ற மாணவர் தலைமையில் 5 மாணவர்கள் கைதானார்கள். இதற்கிடையே சத்தியமூர்த்தி பவன் முற்றுகையிடப்படும் தகவல் அறிந்து காங்கிரஸ் தொண்டர்களும் சத்திய மூர்த்தி பவனில் குவிந்தனர்.
அவர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications