நாமக்கல்லில் 4 பேர் துப்பாக்கி முனையில் கைது- பதுங்கியிருந்தது தீவிரவாதிகளா?
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரை சென்னையில் இருந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் குழு துப்பாக்கி முனையில் மடக்கி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் தீவிரவாதிகளா? மாவோயிஸ்டுகளா? என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
நாமக்கல் நாகராஜபுரத்தில் 4 பேர் தங்கியிருந்த வீட்டை சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார் இன்று பகல் 12.30 மணியளவில் சோதனையிட முயன்றனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்தார். போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த வீட்டில் தங்கியிருந்த 4 பேரையும் கைது செய்து முகத்தையும் மூடியபடி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த பொருட்களையும் மூட்டையாக கட்டி போலீசார் எடுத்துச் சென்றனர். .4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கியிருந்தனர்.
இங்கு தங்கியிருந்தவர்கள் யார், எதற்காக போலீசார் கைது செய்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதேபோல் போலீசார் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றது துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நாமக்கல் போலீசாரோ எங்களுக்கு எதுவுமே தெரியாது என்கின்றனர். இதனால் நாமக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.