தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பலி
தமிழகத்தில் இன்று டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் வரை பலியாகியுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக வைரஸ் காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏராளம். டெங்கு வைரஸை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் லார்வாக்கள் உருவாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அன்றாடம் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மகனூர்பட்டியை சேர்ந்த விவசாயி ஜான் பாஷா என்பவர் உயிரிழந்துவிட்டார். அதேபோல் ஈரோடு மாவட்டம், பா.நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் பிரியா என்பவரும் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், திருவனப்பட்டியைச் சேர்ந்த ரங்கன் என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனினும் நுரையீரல் தொற்றால் அவர் இறந்துவிட்டதாக சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதேபோல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள இலவன்குளத்தைச் சேர்ந்த பிரேம்குமாரும், திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் முடக்குப்பட்டியைச் சேர்ந்த கருப்பன் என்ற மாற்றுத்திறனாளியும் உயிரிழந்தனர்.
மதுரை செக்கானூரணியை சேர்ந்த பாண்டீஸ்வரி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டார். மதுரை மாவட்டம் வாடிபட்டியில் 6 ஆம் வகுப்பு மாணவன் நிதிஷ் குமார் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். இவ்வாறு 12 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications