மதுவை தொடர்ந்து... 5 வயது சிறுவனை 'பீடி' குடிக்க வைத்த கொடுமை... வைரலாகப் பரவும் வீடியோ!
சென்னை: ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனை பீடி குடிக்க வைத்து சிலர் வேடிக்கைப் பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள மேல் சோழங்குப்பத்தில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுவனை சிலர் மது குடிக்க வைத்த வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுவிற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த வீடியோவிற்கு கண்டனங்கள் வலுத்தன. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
பீடி குடிக்கும் சிறுவன்...
இந்நிலையில், தற்போது சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை சிலர் பீடி குடிக்க வைத்த காட்சி ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அப்பாவா?
அந்த வீடியோவில் காக்கி சட்டை அணிந்துள்ள நபரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு பீடி கொடுக்கப்படுகிறது. அதனை அச்சிறுவன் வாயில் வைத்ததும், மற்றொருவர் அதனை பற்ற வைக்கிறார்.
6 ஆண்டு சிறை...
சிறுவன் பீடியை புகைக்கத் தொடங்கியதும், பின்னணியில் பேசும் ஒருவர், ''இந்த காட்சி வெளியானால் 6 ஆண்டு தண்டனை கிடைக்கும்'' என கூறுகிறார். ஆனால், அவரது பேச்சை பொருட்படுத்தாமல் சிறுவனை பீடி புகைக்க சுற்றி இருப்பவர்கள் ஊக்குவிக்கின்றனர்.
இருமல்...
அதனைத் தொடர்ந்து சிறுவனும் சில முறை பீடி புகையை உள்ளே இழுத்து பின் வெளியே விடுகிறான். இதனால் சிறுவனுக்கு இருமல் ஏற்படுகிறது. பின்னர் அச்சிறுவனிடம் இருந்து பீடி வாங்கப் படுகிறது.
வைரல் வீடியோ...
இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப் பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.