ஒரு நிமிஷம் தான்..ஒரு வருட உழைப்பும் போச்சே! பண்ணையைச் சூழ்ந்த தீ..துடிக்க துடிக்க உயிரிழந்த கோழிகள்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருவம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இவரது பண்ணையில் பல செட்டுகள் அமைத்து அதில் கோழி குஞ்சுகளை வளர்த்து வருகிறார். சுமார் 10,000க்கும் மேற்பட்ட கோழிகளை அவர் பராமரித்து வரும் நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோழிகளுக்கு இவர்கள் தீவனம் வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு செட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பம் காரணமாக மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்த செட்டுகளுக்கும் பரவியது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கோழி பண்ணை முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் அவர் வளர்த்து வந்த ஐயாயிரம் கோழிகள், தீவனங்கள் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications