58 வது பிறந்தநாள் காணும் செங்கோட்டை இனியாவது வளர்ச்சி பெறுமா...?
செங்கோட்டை: கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா ஆகியவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகிறது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த குமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தபோது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது.
இந்நிலையில் 1954ம் ஆண்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

1956 நவர்பர் 1
புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது.
அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது.

கேரளாவின் பதிவுகள்
கேரளாவிலிருந்து தமிழகத்தோடு இணைக்கப்பட்ட செங்கோட்டையில் காவல் நிலையம்,மருத்துவமனை, கிராமநிர்வாக அலுவலகம், கச்சேரி காம்பௌண்ட் பள்ளி, நகரின் முளைவுப் பகுதி பேருந்து நிலைய கட்டிடம், நகராட்சி அலுவலகம், குடிநீர் அமைப்பு , ரயில் நிலையம் என பல்வேறு அமைப்புக்கள் இன்னும் கேரள அரசு, மற்றும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற எச்சங்களாக உள்ளன.

வசதியில்லாத செங்கோட்டை
தமிழகத்துடன் செங்கோட்டை அன்று இணையும் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மறந்து இங்குள்ள பல்வேறு அலுவலகங்கள்,பேருந்து வசதிகள்,அடிப்படை வசதிகள் எல்லாமே இடம் பெயர்ந்து விட்டன. ஒரு தாலுகா இணைவதால் ஏராளமான நன்மைகள் இருப்பது வழக்கம். அந்த கனவில்தான் அன்றைய காலக்கட்டத்தில் இப்பகுதியினர் மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால் தமிழகத்தோடு செங்கோட்டை இணைக்கப்பட்ட பின்பு எந்த அடிப்படைவசதிகளையும் பெறவில்லை என்பதுதான் பெரும் குறையாக உள்ளது.

தொழிற்சாலைகள் இல்லை
தமிழகத்தில் அதிகம் பட்டதாரிகள் நிரம்பிய பகுதியாக செங்கோட்டை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கல்விக்கு கல்லூரி,வேலை வாய்ப்பிற்கு எந்த தொழிற்சாலைகளும் கிடையாது. இப்பகுதி கேரளாவிலிருந்து பிரிக்கப்பட்டாலும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர இன்னும் கேரளாவை நம்பிதான் வாழவேண்டிய நிலையுள்ளது.காரணம் இப்பகுதி மக்கள் ஏராளமானவர்கள் கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், குருவாயூர், திருச்சூர், போன்றப் பகுதிகளில் போய்தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

மக்களின் ஆதங்கம்
இந்நகரம் கேரளாவோடு இருந்திருந்தால் திருவனந்தபுரத்திற்கு இணையான வளர்ச்சியை பெற்றிருக்கும் என்று இப்பகுதியினர் கூறுவதை இன்னும் கேட்க முடிகிறது. இருந்ததையும் இழந்த நிலையிலிருக்கும் செங்கோட்டை கேரளவோடு இருந்து பிரிக்கப்பட்டு இன்று 58வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையின் பிரபலங்கள்
இங்கு பிறந்தவர்கள் தியாகிகள் வீரவாஞ்சிநாதன்,சாவடி அருணாசலம் பிள்ளை,அழகப்பா பிள்ளை,கணிதமேதை எஸ்.எஸ்.பிள்ளை,எல்.சட்டனாதக் கரையாளர். இசைமேதை கிட்டப்பா (கே.பி.சுந்தரம்பாள் கணவர்) குணசித்திர நடிகர்.எஸ்.வி.சுப்பையா. ஆகியோர்கள் ஆவர்.

பிரபல தலைவர்கள்
செங்கோட்டைக்கு வராத தலைவர்களே இல்லை என்றுக் கூறலாம் காரணம். இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கிய பாங்கு வகித்த செங்கோட்டைக்கு மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி வண்டிமலச்சியம்மன் கோவில் முன்பு வந்து பேசி சென்றதாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர், அதுபோல பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரும் வந்து சென்றுள்ளனர்.

அமைச்சர் செந்தூர் பாண்டியன்
இப்படி பெயர் பெற்று இந்திய நாட்டின் தலைமை பீடமான "செங்கோட்டை"பெயரைத்தாங்கி நிற்கும் இவ்வூர் பெருமை பெரும் வண்ணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கடையநல்லூர் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக செங்கோட்டையை சார்ந்த செந்தூர் பாண்டியனை அறிவித்து அவரை வெற்றியும் பெறவைத்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்து செங்கோட்டைக்கு சிறப்பை சேர்த்துள்ளார்.

செங்கோட்டை வளர்ச்சி பெறுமா?
கல்வி மற்றும் பொருளாதாரத்திலும் இவ்வூர் இன்னும் நிறைய தொலைவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழக அரசு செங்கோட்டை மீது கரிசனம் காட்டி இந்த 58வது ஆண்டு தொடக்கத்திலாவது பல்வேறு திட்டங்களை இந்த ஊருக்கு வழங்க வேண்டும் என்பது செங்கோட்டை மக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications