அது பாட்டுக்கு முதலை போகுது.. 6 ஆடு, 20 கோழி காலி! மயிலாடுதுறை கொள்ளிடம் குளத்தில் படுத்திருக்குது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த பேரையும் கதறவிட்டு வருகிறது ஒரு முதலை.. கடந்த ஓராண்டு காலமாகப் பதுங்கியிருந்த அந்த எமன் மீண்டும் தலைதூக்கிய சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. அதை பார்த்தாலே கிராம மக்கள், உயிருக்குப் பயந்து அலறியடித்து ஓடிவிடுகிறார்களாம். தற்போது வனத்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.. என்ன நடக்கிறது மயிலாடுதுறை மாவட்டத்தில்?
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், கடந்த ஓராண்டு காலமாக குளத்தில் தஞ்சம் புகுந்துள்ள முதலையினால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வரும் இந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை அய்யனார் குளம்
கொள்ளிடம் அருகே அமைந்துள்ள குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 'அய்யனார் குளம்' உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், அந்த கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் இந்த குளத்தையே நம்பியுள்ளனர்.
இந்த அய்யனார் குளத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இதன் நடமாட்டம் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.. சமீபகாலமாக குளத்தின் கரை ஓரம் வரும் ஆடு மற்றும் கோழிகளை இந்த முதலை இரையாக்க தொடங்கியுள்ளது. அப்போதுதான் முதலை இருப்பதே அங்குள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது..
இதுவரையில் கிராமத்தை சேர்ந்த சுமார் 6 ஆடுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கோழிகளை இந்த முதலை பிடித்துத் தின்றுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.
முதலையின் வினோத நடமாட்டம்
இந்த முதலையின் நடமாட்டம் மிகவும் வினோதமாக உள்ளதாம்.. இரவு நேரங்களில் சாலை ஓரம் இருக்கும் நெட்டகுளத்தில் இறங்கிவிடுகிறது இந்த முதலை... அதிகாலையில், மறுபடியும் அய்யனார் குளத்திற்குத் திரும்பி விடுகிறதாம்.. அதிகாலை நேரத்தில் கரைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளை குறிவைத்துத் தாக்குவதையும் இது வழக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் பகல் நேரங்களில் குளத்தின் கரையிலேயே முதலை படுத்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பிறகுதான் முதலையின் அச்சுறுத்தல் குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்குப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சீர்காழி வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் அந்தப் பகுதியில் முகாமிட்டு தீவிரமாகக் கண்காணித்தனர்.
ஆனால், அந்த சமயத்தில் முதலை வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் போக்கு காட்டியது. இதனால் கண்காணிப்புப் பணி தற்காலிகமாகத் தொய்வடைந்தது.
மிரண்டு போன மக்கள் கோரிக்கை
இந்நிலையில், நேற்று அய்யனார் குளத்தின் கரையில் முதலை மீண்டும் சாவகாசமாகப் படுத்திருந்ததை கிராம மக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சீர்காழி வனத்துறையினர் தற்போது அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். முதலையை கூண்டு வைத்தோ அல்லது வலை விரித்தோ பிடிப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதலை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் குளத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ அஞ்சி வருகின்றனர். மேலும், தங்கள் வாழ்வாதாரமான கால்நடைகளை இழந்து வரும் குன்னம் கிராம மக்கள், இந்த முதலையைப் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் நிலவும் பரபரப்பான சூழலால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications