மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட மேலும் 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட மேலும் 6 கிலோ கட்டிகள் மற்றும் 18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இலங்கை வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த ஒரு சரக்கு கப்பலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு இணை ஆணையர் பாரிவள்ளல் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 11-ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரபீக், செல்வராஜ், ராஜு, ரஹ்மத் அலி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, கைதான 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தபோது, அதே கப்பலில் வந்த கண்டெய்னரில் தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிப்பது தெரியவந்தது.
6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்:
விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், மலேசிய கப்பலில் வந்த மற்ற கண்டெய்னர்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், வீட்டு உபயோகப் பொருள்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பாக்கெட்டுகளில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 6 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.75 கோடி ஆகும்.
மேலும், மற்றொரு சரக்குப் பெட்டகத்தில் பருத்தி ஆடைகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பாக்கெட்டுகளில் இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 18 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் அதில் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 1.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.