6 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி- தத்தளிக்கும் ரங்கசாமி அரசு.. வேடிக்கை பார்க்கும் காங்..
புதுச்சேரி: புதுச்சேரியில் எந்த அளவுக்கு ஓஹோவென ஆட்சியைப் பிடித்தாரோ ரங்கசாமி, அதை விட படு சிரமமான நிலைக்கு தற்போது அவர் தள்ளப்பட்டுள்ளார். ஆறு எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரங்கசாமியும், அவரது அரசும் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் போய் முறையிட்டுள்ளதாகவும், ரங்கசாமிக்கு எதிராக புகார்களை அடுக்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் ரங்கசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரகசியக் கூட்டம்
என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ரங்கசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களின் அதிருப்தியை சபாநாயகர் சபாபதியை சந்தித்து வெளிப்படுத்தினர். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் தொகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இப்படியே போனால் சிக்கல்தான்
இதே நிலை நீடித்தால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்றும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினர். இதனையடுத்து சபாநாயகர் சபாபதி அந்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி ரங்கசாமியை சந்திக்க அழைத்து சென்றார்.
ரங்கசாமியுடன் ஒரு மணி நேரம் பேச்சு
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை முதல்வர் ரங்கசாமி அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் தியாகராஜன், பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம், கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினராம்.
உங்க தொகுதி மட்டும் ஒஸ்தியா...
ரங்கசாமியின் சொந்த தொகுதியான கதிர்காமம், அவரது அண்ணன் மகன் தொகுதியான இந்திரா நகர் ஆகியவற்றில் மட்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். மேலும் தங்களது தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் மத்தியில் எம்.எல்.ஏ.க்கள் மீதான மரியாதையே குறைந்து போய் விட்டது. இத்தகைய சூழலில் எப்படி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.
அண்ணன் மகன் மாமனாரின் அட்டகாசம்
மேலும், ஊசுடு தொகுதியில் முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகன் தமிழ்செல்வனின் மாமனார் நேரடியாகவும் பகிரங்கமாகவும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினர். பல நல திட்டங்களை நின்று போய் விட்டதால் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் செல்வாக்கு சரிந்து போயுள்ளது என்று சுட்டி காட்டினர்.
புரோக்கர் தொல்லை வேற...
இதுபோக முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் சிலர் புரோக்கர்களாக செயல்படுவதாகவும் அவர்களால் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அதுபோல் முதல்வரின் நிவாரண உதவிகள் அலுவலகத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும் கூறினர்.
சொல்லுங்க.. சொல்லுங்க...
எம்.எல்.ஏ.க்கள் ஆவேசத்துடனும் ஆகிரோஷத்துடனும் பேசியதை முதல்வர் ரங்கசாமி அமைதியாக கேட்டுக்கொண்டார். பின்னர், அவர்களிடம் முதல்வர் கூறுகையில், மத்திய அரசு உரிய நிதி ஒதுக்காததால்தான் நல திட்டங்கள் நின்றது. அதனை தற்போதைய பட்ஜெட்டில் சரி செய்யப்பட்டுள்ளது. இனி அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். குறிப்பாக முதியோர் உதவி தொகை, உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, குடிசை வீடுகளை கல் வீடாக மாற்ற நிதி உதவி ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அரிசியை கொடுத்துருவோம்
மேலும் நிறுத்தப்பட்டுள்ள இலவச வெள்ளை அரிசியை இந்த மாதம் முதல் வழங்க உள்ளோம். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கட்சிக்கு செல்வாக்கு உயரும். எம்.எல்.ஏ.க்களுக்கும் மரியாதை கூடும்.
2000 பேருக்கு வேலை போட்டுத் தரப் போறேன்
வருகிற நவம்பர் மாதத்திற்குள் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் தொகுதி இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். தொகுதி பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளை அழைத்து உத்தரவிட உள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.
மகனே, மாமனாரை கண்டிச்சு வைய்யி...
அதோடு நில்லாமல், ஆலோசனையின்போது அங்கிருந்த தனது அண்ணன் மகன் தமிழ்செல்வனை அழைத்து கட்சி எம்.எல்.ஏ.விற்கு எதிராக செயல்படும் அவரது மாமனாரை கண்டிக்கும்படி கடிந்து கொண்டாராம். மேலும் முதல்வர் அலுவலக ஊழியர்களின் புரோக்கர்களையும், முறைகேடு செய்பவர்களையும் வெளியற்றுவதாகவும் உறுதி அளித்தார்.
ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக் கொள்வோமா...
இதனையடுத்து ரங்கசாமியுடன் இருந்த சபாநாயகரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினர். முதல்வர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் அதனால் பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.
விசுவாசத்தை உறுதி செய்கிறோம்
இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானம் அடைந்தனர். தாங்கள் எப்போதும் கட்சிக்கும், ரங்கசாமிக்கும் விசுவாசமாக இருக்க விரும்புவதாகவே தெரிவித்து விடைபெற்றனர். முதல்வரின் வீட்டுக்கு வெளியிலே இருந்த நிருபர்களிடமும், தங்களுடைய ஆதரவு எப்போதும் ரங்கசாமிக்கு உண்டு என்றும் நாங்கள் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்தான் என்றும் கூறினர்.
இப்போதைக்கு நிம்மதி
இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தற்காலிகமாக சமாதானம் அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. ரங்கசாமி உறுதி அளித்தவாறு வேலை வாய்ப்பு, தொகுதி பணிகள் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் வெகுண்டு எழுவார்கள் என்றே கூறப்படுகிறது.
நானும் ஆதரவுங்கோ.. காரைக்கால் எம்.எல்.ஏ
இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு, காரைக்கால் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ சிவக்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளாராம்.
16 இல்லாவிட்டால்...
புதுவை மாநிலத்தை பொருத்தவரையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 16 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் தொடர முடியும். என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்ளும், காரைக்காலை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரின் ஆதரவும் உள்ளது.
ஒரு ஆள் போனாலும் அம்புட்டுத்தான்...
இதில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு பறிபோனாலும் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விடும். அதிலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் மொத்தம் உள்ள 15 எம்.எல்.ஏ.க்களில் சரிபாதிக்கு நிகராக தற்போது அதிருப்தி அணியாக எழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
என்ன செய்வார் ரங்கசாமி
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ரங்கசாமி அபாரமான முறையில் ஆட்சியைப் பிடித்தவர் ஆவார். அவர் மீது மக்கள் அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து காங்கிரஸை விரட்டியடித்தனர். ஆனால் இப்போது அந்தப் பெயர் போய் விட்டது. காரணம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் பல்வேறு குளறுபடிகள். ரங்கசாமி திணறுவதை காங்கிரஸார் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதேசமயம், துணை நிலை ஆளுநர் மூலமும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
இதை எப்படி ரங்கசாமி சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.