தூத்துக்குடி.. மக்கள் அதிகார அமைப்பினர் 6 பேரை காணவில்லை.. உறவினர்கள் பகீர் புகார்!
மக்கள் அதிகார அமைப்பினர் 6 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி போராட்டத்தின்போது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேர் காணவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலின் விளைவாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 126 பேரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவிவந்ததால், போலீசார் சந்தேகப்படும்படி திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட்நகர் பகுதிகளில் வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தி அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். மேலும் சிலரை விடுவிக்காததால், வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாரால் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த 95 பேர் மீட்கப்பட்டனர். இதுபோல மற்ற பகுதிகளிலும் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை போலீசார் விடுவிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரும் அடங்குவார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களுடன் பல அப்பாவி இளைஞர்களும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என தெரியாமல் அவர்கள் குடும்பத்தினர் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாயமான மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேரின் கதி என்ன? எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பதை கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுவினையும் உறவினர்கள் அனுப்பியுள்ளனர். தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் அதிகார அமைப்பினரை சார்ந்த 6 பேரை காணவில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.