ஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல்
கோவை ஐசிஐசிஐ வங்கியில் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

கோவை: கோவையில் ஐசிஐசிஐ வங்கியில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் தங்கள் கணக்கில் கடந்த 5 ம் தேதி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் சிங்காநல்லூர் காவல் துறையில் புகாரளித்தனர். இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் மண்டல மேலாளரும் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.இதில் ஏ.டி.எம் மையத்தில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி இருப்பதும், அதன் மூலம் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடி இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தனிப்படையினர், கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவையில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த தமிழரசன்,வாசிம், சென்னையை சேர்ந்த நிரஞ்சன், திருச்சியைச் சேர்ந்த கிஷோக், திருப்பூரைச் சேர்ந்த மனோகரன், இலங்கை அகதி லவசாந்தன் ஆகிய ஆறு பேரையும் கோவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து இன்னோவா, பி.எம்.டபிள்யூ ஆகிய 2 சொகுசு கார்கள் , 20 போலி ஏடிஎம் கார்டுகள்,17 செல்போன்கள் ,2 லேப் டாப் , சுமார் 40 கிராம் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டது . இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications