தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 500 மாடுகள்... ரயில் மோதி 60 மாடுகள் பலியான பரிதாபம்
மதுரை: மதுரை அருகே, 500 கிடைமாடுகள் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது, ரயில் மோதி 60 மாடுகள் பரிதாபமாக பலியாயின.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் கிராமத்தில் சுமார் 500 கிடைமாடுகள் வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. நேற்று மதியம் அருகில் உள்ள வைகை ஆற்றில் தண்ணீர் குடித்த மாடுகள் மீண்டும் மேயச்சல் நிலத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளன.
அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மாடுகள் மீது மோதியுள்ளது. இதில் சுமார் 60 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. மேலும் பல மாடுகளின் உடல் உறுப்புகள் சேதம் அடைந்து தூக்கி வீசப்பட்டன.
விபத்துக் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, தேனூர் ஊராட்சி மன்ற தலைவி லோகசுந்தரி சோனைமுத்து, மண்டல துணை தாசில்தார் மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பலியான மாடுகளை பார்வையிட்டனர்.
காயம் அடைந்த மாடுகளுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தனர். மாடுகளின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால், ரெயில்வே போலீசார் அவரை தேடி வருகின்றனர். விசாரணையில் மாடுகளைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சி செய்ததும், அது பலனளிக்காமல் போனதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications