60ல் திருமணத்திற்கு பெண் தேடிய ராமமூர்த்தி... ஆள் வைத்து கடத்திய வைஷ்ணவி
சென்னை: திருமணம் செய்து கொள்ள பெண் தேடிய 60 வயது வங்கி அதிகாரி ராமமூர்த்தியை 35 வயதான பெண் ஒருவர் ஆள் வைத்து கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல்நிலையத்திற்கு எத்தனையோ விநோதமான புகார்கள் எல்லாம் வந்துள்ளன. ஆனால் சில தினங்களுக்கு முன் வந்த புகாரோ முற்றிலும் வினோதமானது.

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப 60 வயதில் ஒருவருக்கு திருமண ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசையே அவரை கடத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
சென்னை, கீழ்க்கட்டளையில் வசித்து வரும் முன்னாள் வங்கி அதிகாரியான ராமமூர்த்தி, விவாகரத்து பெற்றவர் ஆவார். சமீபத்தில் தான் தனியார் வங்கி பணியில் இருந்து ராமமூர்த்தி ஒய்வு பெற்றார். தனியாக வசித்து வந்த அவருக்கு மீண்டும் திருமண ஆசை எழவே மணமகள் தேவை என்று நாளிதழில் விளம்பரத்தை கொடுத்தார்.
கூப்பிட்ட வைஷ்ணவி
இந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசினார். தனது பெயர் வைஷ்ணவி என்றும், தனக்கு வயது 35 எனவும் கூறியுள்ளார்.மேலும் திருமணத்திற்கு முன் ராமமூர்த்தியின் நிதி நிலைமை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
35 லட்சம் வங்கி இருப்பு
அப்போது வங்கியில் தனது பெயரில் 35 லட்ச ரூபாய் பணம் உள்ளதாக ராமமூர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவெடுத்தனர். அதன்படி கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திற்கு வருமாறு அப்பெண் ராமமூர்த்திக்கு அழைப்பு விடுத்தார்.
கோயம்பேட்டில் சந்திப்பு
ராமமூர்த்தியும் குறித்த நேரத்தில் அப்பெண்ணை சந்திக்க ஆவலுடன் கோயம்பேடு சென்றார். அங்கு அவரை சந்தித்த வைஷ்ணவி சில நிமிடங்கள் அவருடன் பேசினார். அப்போது திடீரென கார் ஒன்றில் 4 பேர் அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். ராமமூர்த்தியை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டுக்கொண்டனர். அவர்களுடன் வைஷ்ணவியும் ஏறிக்கொண்டார்.
2 நாட்கள் அலைக்கழிப்பு
அதன்பின் 2 நாட்கள் காரில் வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சுற்றி சுற்றி வந்தனர். பின்னர் நேற்று காலை தாம்பரத்தில், ராமமூர்த்தியின் வங்கி கணக்கு உள்ள வங்கிக்கு அவரை அழைத்துசென்றனர்.
அவரிடம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி மிரட்டி அனுப்பியுள்ளனர்.
தப்பிய ராமமூர்த்தி
வங்கிக்குள் நுழைந்தவுடன் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ராமமூர்த்தி தான் கடத்தப்பட்டது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வங்கி அதிகாரி தாம்பரம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் வங்கிக்கு விரைந்து வந்தனர்.
சிட்டாக பறந்த வைஷ்ணவி குரூப்
அப்போது காரில் இருந்த கடத்தல் கும்பல் போலீசாரை பார்த்தவுடன், காரை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்துவிட்டனர். பின்னர் தனக்கு நேர்ந்த நிலை குறித்து ராமமூர்த்தி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கில்லாடி பெண்ணையும் அவளது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
60ல் வந்த ஆசை
60 வயதில் திருமண ஆசை வந்த ராமமூர்த்தி கொடுத்த மணப்பெண் தேவை விளம்பரம் அவரது உயிருக்கே உலை வைக்க இருந்தது என்று கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications