கமல்ஹாசனைக் குழந்தையாகக் காட்டிய தியேட்டருக்கு மூடு விழா!
மயிலாடுதுறை: சுமார் 62 ஆண்டுகள் பழமையான திரையரங்கம் ஒன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது.
மயிலாடுதுறையில் உள்ளது மிகப் பழமையான பியர்லெஸ் தியேட்டர். இதில் கடந்த 1962 ஆம் ஆண்டு வெளிவந்த 'பார்த்தால் பசி தீரும்' தமிழ்த் திரைப்படம் முதன்முதலாகத் திரையிடப்பட்டது.

அந்தக் காலத்தில் இந்த தியேட்டர் செய்த வசூல் சாம்ராஜ்யம் பெரிய அளவில் பேசப்பட்டது. 'பார்த்தால் பசி தீரும்' படத்தை பீம்சிங் இயக்கி இருந்தார். இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சரோஜா தேவி, சாவித்திரி என அன்றைய மெகா ஸ்டார்ஸ் நடித்திருந்தனர்.
அதில் கூடுதல் சிறப்பாகக் குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். பிரபல கதாசிரியர் ஆரூர் தாஸ் வசனம் எழுதிய திரைப்படம் இது. இப்படத்தின் கதை ஏ.சி. திருலோகச்சந்தருடையது.

இத்தனைப் பெருமைகளைப் பெற்றிருந்த இந்தப் படம்தான் முதன்முதலாக மாயவரம் பியர்லெஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்படிப் பார்த்தால் ஏறக்குறைய 62 ஆண்டுகள் பயணத்தை இத்திரையரங்கம் நிறைவு செய்து விட்டது.
அன்றைக்கு ஆரம்பமான இத்திரையரங்கில் சில ஆண்டுகள் முன் வெளிவந்த கேஜிஎஃப், அஜித் நடித்த வலிமை, பரியேறும் பெருமாள் எனத் தனது பயணத்தை விடாமல் தொடர்ந்து வந்தது.

இந்தத் திரையரங்கில் வெளியான அம்மன் கோயில் கிழக்காலே 100 நாள்கள் ஓடி உள்ளது. அதைப்போல ரஜினியின் மனிதன், மாப்பிள்ளை, படையப்பா போன்ற படங்களும் அதிக நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளன. ஒரு காலத்தில் காலைக் காட்சிக்கு வருபவர்கள் டிக்கெட் கிடைக்காமல் மதிய ஷோ பார்க்கும் அளவுக்கு இந்த அரங்கம் ரசிகர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்துள்ளது.
காலப்போக்கில் பல தியேட்டர்கள் மல்டிபிக்ஸ் மால்களாக மாற்றம் அடைய ஆரம்பித்ததைப் போல் இது மாறவில்லை. பழமையான இதன் தோற்றத்தைக் கண்ட ரசிகர்கள் பலர் வருவதை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்தத் திரையரங்கில் கடந்த 25 வருடங்களாக ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் ஸ்ரீனிவாசன். அவர் தனது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். "நான் இங்கு 1982இல் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு ஆபரேட்டர் வேலை எதுவும் தெரியாது. தொழில் கற்றுக்கொள்வதற்காக வேலைக்குச் சேர்ந்தேன்.
நான் வந்த போது 'அதிசயப் பிறவிகள்' படம் ஓடிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 1995இல் ஆபரேட்டர் பரீட்சை எழுதி ஆபரேட்டராக பதவி உயர்வு பெற்றேன். 1985 முதல் 93 வரை கிருஷ்ணா பேலஸ் திரையரங்கத்தில் வேலை பார்த்தேன். 1993இல் இருந்து மாயவரம் பியர்லெஸ் தியேட்டரில் வேலை பார்த்து வருகிறேன்.

எங்கள் தியேட்டரில் ஒரு ஆண்டுக்கு 3 படங்கள் ஓட்டி இருக்கிறோம். தூறல் நின்னு போச்சு, கரகாட்டக்காரன், முந்தானை முடிச்சு என பல படங்கள் 100 நாட்கள் ஓடி இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ரீல் சிஸ்டம்தான்.
அதில் தான் படம் ஓட்டிக்கொண்டிருந்தோம். 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு ரீல் மாற்ற வேண்டும். அது கஷ்டமான வேலை. எங்கள் தியேட்டரில் வைத்திருந்த புராஜெக்டர் பெயர் பியர்லெஸ். ஆகவே அந்த கம்பெனி பெயரையே தியேட்ட ருக்கு வைத்துவிட்டார் முதலாளி.

இப்போது 12 ஆண்டுகளாக க்யூப் சிஸ்டம்தான். அதில்தான் படம் ஓட்டுகிறோம். அதில் அதிக வேலைகள் இருக்காது. சுலபமான வேலைதான். ஆனால் இப்போது ஒட்டு மொத்தமாக தியேட்டரை மூடிப் போகிறோம்.
எங்கள் முதலாளிக்கு ஆடுதுறை, குத்தாலம், செம்பகனார்கோயில், குடவாசல், சீர்காழி எனப் பல ஊர்களில் தியேட்டர் இருந்தது. ஆனால் இப்போது இல்லை" என்கிறார்

அடுத்ததாக இதே தியேட்டரில் கேட்கீப்பராகவும் டிக்கெட் கொடுப்பவராகவும் வேலை செய்தவர் முருக பூபதி. அவர், "இந்த தியேட்டர் 12 ஆம் ஆண்டு விழாக் கொண்டாடிய காலத்தில் வந்து சேர்ந்தேன். 1982 ஆம் ஆண்டு. நான் வேலைக்குச் சேர்ந்த போது முதல் படம் 'ஜம்பு' ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். அன்று முதல் கடந்த 42 வருடங்களாக இங்கேதான் வேலை பார்த்து வருகிறேன்" என்கிறார்
தங்களின் வாழ்க்கையில் பாதி ஆயுளை இந்தத் தியேட்டரில் அர்ப்பணித்த இவர்கள் இனி என்ன செய்வார்கள் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி.















Click it and Unblock the Notifications