வாங்குன பணத்தை கொடுக்கலன்னா ஆசைக்கு இணங்கு… 68 வயது ஆசிரியர் கொலை… கணவன் மனைவி கைது
கோவை: கடனாக கொடுத்த பணத்தை உடனடியாக கொடுக்கவில்லை என்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தொல்லை கொடுத்த 68 வயது ஆசிரியரை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தீர்த்துக் கட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். 68 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி அனுசியா இறந்து சில வருடங்கள் ஆகிறது. மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடித்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியாக வீட்டில் வசித்து வந்த மாணிக்கத்தின் வீட்டில் இருந்து துர்வாடை வீசியுள்ளதால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், மாணிக்கம் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளனர். பின்னர், அவரது உடலை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் தாங்கள்தான் கொலை செய்தோம் என்பதை தம்பதிகள் இருவரும் ஒத்துக் கொண்டனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, விஜய் மற்றும் விமலா ஆகிய இருவரும் கணவன் மனைவி. இவர்கள் இருவரும் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். பாரதி என்பவர் மூலம் ஆசிரியர் மாணிக்கத்துடன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் மாணிக்கம் வட்டிக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில், வீட்டின் அவசரத் தேவைக்காக ஆசிரியர் மாணிக்கத்திடம் விமலா வட்டிக்கு பணம் வாங்கி, மாதம் மாதம் வட்டியையும் செலுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, திடீரென பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்று மாணிக்கம் செல்போனில் விமலாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விமலா தன் கணவர் விஜய்யிடம் இதுபற்றி கூறியுள்ளார். தொடர் தொல்லை பொறுக்க முடியாத தம்பதிகள் கடந்த 27ம் தேதி மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்று இதுகுறித்து பேசியுள்ளனர். வாய்ப்பேச்சு தகராறாக மாறியதில் ஆத்திரம் அடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணிக்கத்தை வெட்டி கொலை செய்துவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்த விசாரித்த போது, தங்களது வாக்குமூலத்தில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர்.