போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் இழுபறி... மீண்டும் ஸ்டிரைக் வருமா?
சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 5.5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதனை ஏற்க தொழிற்சங்கள் மறுத்துவிட்டதை அடுத்து மீண்டும் மாலையில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய உயர்வு தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் இன்று நடைபெற்றது. 5 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே இன்றைய பேச்சுவார்த்தையிலாவது தீர்வு கிடைக்கவேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதனிடையே காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5.5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசின் குழு முன்வந்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. சில சங்கங்களின் தலைவர்கள் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இன்று மாலையில் மீண்டும் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கட்ட பேச்சுவார்த்தைகள்
ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இடையே, இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து பார்க்கலாம்.

திடீர் வேலைநிறுத்தம்
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு, டிசம்பர் 31 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து 2015 ஜனவரி 2 ல் பேச்சுவார்த்தை குழுவை தமிழக அரசு நியமித்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
பின்னர் பிப்ரவரி 11ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்தாமல் கோரிக்கை மனு மட்டுமே பெற்றதால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இதனையடுத்து மார்ச் 2, மார்ச் 12, மார்ச் 20, மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி என ஐந்து கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 5 கட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.

கோரிக்கைகள் என்ன?
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் உள்ள குளறுபடி நீக்குதல், 240 நாட்கள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்தல், விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது, ஊதிய உயர்வு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு கிடைக்கவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இழுபறிக்கு தீர்வு
இழுபறிக்கு தீர்வு இதுவரையில் நடந்துள்ள பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளோம். அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்பதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த 54,000 பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள பிரச்சினை, சேமநல திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் இழுபறி நிலவுகிறது என்று ஏஐடியுசி பொதுச் செயலாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

5.5 சதவிகித ஊதிய உயர்வு
இதனிடையே இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5.5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசின் குழு முன்வந்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

மாலையில் மீண்டும் பேச்சு
சில சங்கங்களின் தலைவர்கள் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இன்று மாலையில் மீண்டும் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்க மறுப்பு
இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சி சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் தரப்படவில்லை. குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவாக உள்ளது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

அரசு கேட்கவில்லை
கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., கூறுகையில், என்ன கொடுத்தால் ஒப்புக் கொள்வீர்கள் என்று கூட அரசு தரப்பில் கேட்கவில்லை. கடந்த ஒப்பந்தத்தில் பாதி அளவிற்குத்தான் கொடுத்துள்ளார்கள். மாலையில் முடிவு எடுப்போம் என்றார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications